Thursday, May 15, 2014

-Razana Manaf

மனிதவாழ்க்கையில் திருமணம் என்பது தவிர்க்கவே முடியாத ஒரு விடயம் அதுவும் இஸ்லாம் மார்க்கம் திருமணத்தைப்பற்றி நிறையவே கூறியிருக்கின்றது. துறவற வாழ்க்கையை அது முற்றாகவே தடைசெய்துள்ளது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் , திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும் என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். 
(நூல்: புகாரி – 1905.)

மேலும் அண்ணல் நபிகளார் கூறும்போது , ‘திருமணம் செய்தவன் மார்க்கத்தில் மூன்றிலிரண்டு பங்குகளை நிறைவேற்றி விட்டவனாவான். மீதியில் அவன் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளவும்’; என்றும்.., ‘திருமணம் என் சுன்னத்தான வழிமுறை, அதனை புறக்கணிப்பவர் என்னைச் சார்ந்தவர் அல்ல’ என்றும் கூறினார்கள்… அதுமட்டுமின்றி திருமணத்தை பற்றி அதிகமான ஹதீஸ்களை நாம் பார்க்க முடியும் மேலே சொல்லப்பட்டுள்ள இந்த ஹதீதுகள் சிறு உதாரணத்துக்கு மட்டுமே சொன்னேன்..

இன்றைய காலகட்டத்தில் அதிகமான இளைஞர்கள் திருமணத்தை பற்றி ஒரு தப்பான அபிப்பிராயமே கொண்டுள்ளார்கள் அதாவது திருமணம் முடித்தால் எங்கே தமது சுதந்திரம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்கின்ற ரீதியில் கற்பனை பண்ணுகிறார்கள் அதன் விளைவு மனைவி ஒரு சர்வதிகாரி, திருமணம் என்பது பாலுங்குழி, அதலபாதாளாம், அதில் விழுந்தவன் மீளவே முடியாது என்கின்றவாறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.. சில பெரியவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல அவர்களும் மனைவிமார்களை பற்றி போடும் பதிவுகளால் இளையவர்கள் மனம் பாதிக்கப்படுகிறார்கள்.

திருமணம் என்பது ஒரு அழகான விடயம், அதில் பல்வேறு அம்சங்கள் அடங்கியிருக்கிறது உங்களுக்கான பாசம், கவனிப்பு, துன்பத்தில் பங்குகொள்ளும் மனப்பாங்கு, பாலியல் தேவைகள், பொழுதுபோக்கு, உடல் இயலாமையின் போது உங்களுக்கு தேவைப்படுகின்ற உதவிகள், ஒரு நல்ல சமூகத்தை கட்டியெழுப்ப கூடிய வாய்ப்பு என்கின்ற விடயமெல்லாம் ஒரு திருமணத்தின் மூலம் நிறைவேறுகின்றது.. உங்களின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவதாக இருந்தால் அதற்கு ஒரு விலைமகள் போதும்… விபச்சாரத்தை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் மற்ற அம்சங்கள் கிடைக்க வேண்டுமாக இருந்தால் அதற்கு நல்ல ஒரு வாழ்க்கை துணை வேண்டும்.. எல்லோருமே நல்ல வாழ்க்கை துணையைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் ஆனால் ஒவ்வொருவரின் நடவடிக்கைகள் மூலமும் அவர்கள் தோல்வியடைந்து விடுகிறார்கள்..

உங்களுக்கு வாய்த்திருக்கின்ற கணவன்/ அல்லது மனைவியை சிறந்த நண்பராக்கி கொள்வதும் அல்லது விரோதியாக்கி கொள்வதும் உங்களின் கரங்களில் தங்கியுள்ள விடயம்.. எல்லா கணவன்மாரும் அல்லது மனைவிமாரும் சர்வாதிகாரிகள் அல்ல ஒவ்வொருவருக்குள்ளும் ஈரமான மனது இருக்கின்றது அதை கண்டுபிடிக்க ஒவ்வொருவரும் தவறி விடுகிறீர்கள் அதனால் ஆளாளுக்கு குற்றம் கூறிக்கொண்டு பிரிந்து விடுவது மட்டுமின்றி திருமணம் என்பது ஒரு போலி வாழ்க்கை என பிதற்றிக்கொண்டு திரிகிறீர்கள்..

ஒரு குடும்பத்திற்கு கணவன் செய்யவேண்டிய கடமைகளும், மனைவி செய்யவேண்டிய கடமைகளும் அதே போன்று இருவரும் சேர்ந்து செய்யவேண்டிய கடமைகளும் இருக்கின்றது அந்த கடமைகளை நீங்கள் ஒழுங்காக நிறைவேற்றி வருவீர்களானால் நிச்சயம் சந்தோசமான குடும்பம் ஒன்றை எம்மால் நிர்ணயிக்க முடியும்.. 

‘திருமணம செய்து குழந்தைகளை அதிகம் பெற்று எண்ணிக்கையில் பல்கிப் பெருகிக் கொள்ளுங்கள். ஒரு விழுக்காட்டியாக இருந்தாலும் சரி, நிச்சயமாக நான் உங்களைக் கொண்டு கியாமத் நாளில் மற்ற உம்மத்தினரிடம் பெருமை பாராட்டுவேன்’என்றும், ‘அதிகமாக நிகாஹ் செய்தவர்கள் நபிமார்கள்’ என்றும் அண்ணல் நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள்.. ஆகவே மார்க்கத்தில் கட்டாய கடமையான திருமணத்தை அழகான முறையில் நிறைவெற்றிக்கொண்டு அதன் மூலம் நல்லதொரு சமூகத்தை உருவாக்கும் பொறுப்பை சரியான முறையில் நிறைவேற்றுங்கள் சமூக வலைத்தளங்களில் இவர்கள் பதிவிடுவதைப்போன்று திருமணம் ஒன்றும் மிக மோசமான விடயமல்ல அதில் தோல்வியடைந்தவர்களை விட வெற்றி பெற்றவர்கள்தான் அதிகம்.


0 கருத்துகள்::

Post a Comment

Like This Page

Al_Quran Mp3

Popular Posts